Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 ஆக., 2011

போராடிப்பார்....!!! குழப்பம் இருக்காது...!!!

எனக்கு என்னாயிற்று...? என்ன நடக்குது...?
ஒன்றுமே புரியவில்லையே...!
எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!!
அனைத்துமே புரியாத புதிர்களாய்!!!

சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும்,
நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்;
அம்மா சொன்னா...!?

பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும்,
நன்றாகத்தான் படிப்பேனாம்;
ஆசிரியர்  சொன்னார்கள்...!?

வேலை செய்யும் இடத்தில் கூட,
நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்;
எல்லாருமே சொல்கின்றார்கள்...!?

எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்...
அது எனக்கே தெரியும்!?

இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!?
அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ???

என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம்,
எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை.
என்னைத் தவிர எதைச் சிந்தித்தாலும்...
என்னவோ ஆகுது எனக்குள்...!?
அது கோபமா... குழப்பமா... இல்லை பைத்தியக்காரத்தனமா ???
தெரியவில்லை எனக்கு!

என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்...
சிறு இதயமும்... பெரும் மூளையும் எனக்குள் இல்லைப் போல...!
இருந்திருந்தால், பெரும்பாலான பூவுலக வாசிகள் போல்...
நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்திருப்பேன்!

யாரோ சமைக்கும் உணவை ருசித்தபடி,
மற்றவர் அழுகுரல்களினை ரசித்தபடியே,
அவர்களின் கண்ணீரிலும் செந்நீரிலும்... ஆனந்த நீச்சல் போடலாம்!
ஆடலாம்... பாடலாம்.. என்னவேண்டுமானாலும்... செய்யலாம்!
தற்கால ஆறறிவு உயிரினங்களிடம் "மனிதம்" என்பதற்கான
எந்தவித அடையாளங்களும் இல்லாதபோது...
அதைத் தொலைத்ததற்காக நான் ஏன் குழம்பவேண்டும்???

ஆம்... இப்பொழுது புரிகின்றது! என்னுள் இருந்து யாரோ...
தன் பெயர் "மனச்சாட்சி"... தன்னைக் காப்பாற்றச் சொல்லி
அழுவது... தெளிவாகக் கேட்கின்றது!!!

"மனச்சாட்சி" என்ற ஒன்றைக் காப்பாற்றுவதன் மூலம்,
மனிதத்தினை வாழவைக்கலாம் என்றால்...
அதைக் காப்பாற்றுவதற்காக...
 எந்த ஆயுதத்தினைக் கையில் எடுத்தாலும் தப்பில்லை!
போராடிப்பார்....!!! குழப்பம் இருக்காது...!!!

"மனிதம்" வாழ ... உங்கள் மனச்சாட்சியை சாகடிக்காமல் இருந்தாலே போதும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக